அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 ஜூலை, 2012

“உண்மையிலேயே நீண்ட கதை”


“உண்மையிலேயே நீஈஈஈஈண்ட கதை”

ரொம்ப நாளைக்கு முன்னாடி..... அப்போ எங்க ஊர் கவுர்மெண்ட் ஸ்கூலில் நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். (ஹி...ஹி.. இப்போவும் அவ்வளவுதான் படிப்பு).  உண்மையிலேயே ஒரு நல்ல வாத்தியார் அங்க இருந்தார்.  எங்களுக்கு சயின்ஸ் பாடம் எடுப்பார்.

அவர்கிட்ட ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்தது.  தினமும் அவர் வகுப்பில் பாடம் நடத்த தொடங்குவதற்கு முன் பசங்களோட கவனம் சிதறாம இருக்கனும் என்பதற்காக ஒரு கதை சொல்வார்.  பெரும்பாலும் அறிவுரை சொல்ற மாதிரிதான் இருக்கும்.  கொஞ்சம் நாள் கழித்து கடைசி பென்ச் பசங்க (நாங்க தாங்க) வாத்தியார் கதை சொல்லி முடித்ததும், சார் கதை ரொம்ப நல்லா இருந்தது சார்.... இன்னொரு கதை சொல்லுங்க என்போம்.  வாத்தியாரும், அவரு மனநிலை நல்லா இருந்தா  இன்னொரு கதை சொல்வாரு.  அப்டி இல்லன்னா இன்னைக்கு இவ்வளவு கதை போதும் புத்தகத்த எடுங்க என்று சொல்லி பாடத்த நடத்த ஆரம்பித்து விடுவார்.


இந்த மாதிரி போய்க்கொண்டிருந்த போது, வாத்தியார் எங்களோட உண்மையான நோக்கத்த (அதாங்க.... கதை சொல்ல வெச்சே பீரியட ஓட்டிடலாம் என்கிற திட்டத்தைத்தான்) கண்டுபிடித்துவிட்டிருப்பார் போல.  வழக்கம்போல அவர் கதை சொல்லி முடித்ததும், சார்..... இன்னொரு பெரிய கதை சொல்லுங்க என்றோம்.  அவரும், சரிங்கடா கதையை கேளுங்க என்று சொல்ல ஆரம்பித்தார்.  என்ன நீங்களும் ரெடிதானே?  “ஒரு ஊருல ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு பண்ணையாருக்கு சொந்தமா ஒரு வயல் இருந்ததாம். (பண்ணையாருக்கு ஒரே ஒரு வயல்தான் சொந்தமான்னு சோசலிஸமெல்லாம் பேசப்படாது) அந்த வயலில நெல்லு நடவு செஞ்சிருந்தாங்களாம்.  அந்த நெற்பயிரெல்லாம் நல்லா வௌஞ்சி நெல்மணிகளோட கதிர் நெறைய இருந்திச்சாம்.  அந்த  ஊருல நெறைய சிட்டுக் குருவிங்களாம் இருந்திச்சாம். அந்த சிட்டுக் குருவிங்களாம் வயலில நெல்லு வௌஞ்சிருக்கறத தெரிஞ்சிக்கிட்டு அந்த வயலுக்கு வந்திச்சாம்.  முதல் சிட்டுக் குருவி போய் ஒரு நெல்மணியை கொத்திக்கொண்டு போயிடுச்சாம். அப்புறம் இரண்டாவது சிட்டுக் குருவி போய்  இரண்டாவது  நெல்மணியை கொத்திக்கொண்டு  போயிடுச்சாம் அப்புறம் மூன்றாவது சிட்டுக் குருவி போய்  மூன்றாவது நெல்மணியை கொத்திக்கொண்டு  போயிடுச்சாம். பிறகு நான்காவது சிட்டுக் குருவி போய்   நான்காவது நெல்மணியை கொத்திக்கொண்டு போயிடுச்சாம்...........” இப்படி சொல்லிக்கொண்டு போய்க்கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏ........... இருந்தார்.   அய்யய்யோ சார் கதை போதும் சார் என்று நாங்கள் வாத்தியாரை நிறுத்தினோம்.  அத்தோடு சரி.... நாங்கள் அவரை “இன்னொரு... கதை... சொல்லுங்க... ” என்று அதன்பிறகு கேட்கவேயில்லை.  உங்களுக்கு கேட்கனும்னு தோன்றுதா?

வியாழன், 10 மார்ச், 2011

ஊர் ஞாபகம்


ஊர் ஞாபகம்

அப்பாவிடம் கோபித்துக்கொண்டு  சாலையோர
    சிறு மரத்தினடியில் நின்று அடம்பிடிக்கும் யாரோ ஒரு சிறுவன்

சூட் அணிந்த அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு
     மின்படியில் அமைதியாக இறங்கும் யாரோ ஒரு சிறுமி

கையில் இரண்டு பெரிய ஷாப்பிங் பைகளுடன்
   மெட்ரோவில் சிரமத்துடன் நிற்கும் யாரோ ஒரு மூதாட்டி

தள்ளாத வயதிலும் தன் பேரனுக்கு
    மகிழ்வுடன் ஐஸ்கேண்டி வாங்கிக் கொடுக்கும் யாரோ ஒரு பெரியவர்

விமான நிலையத்தில் வந்திறங்கிய உறவைக்
   கட்டியணைத்து மகிழும் யாரோ சொந்தங்கள்

கூட்டமாக பூங்காவில் அமர்ந்து
   அரட்டையடிக்கும் யாரோ நண்பர்கள்

மாறாக, சேர்ந்தார்போல் இரண்டு நாட்கள் கூட
   ஒரே உணவகத்தில் சாப்பிடமுடியாத ஏதோ உணவு

எல்லாம் தொடர்பற்ற நிகழ்வுகள் - ஆனாலும்
  ஏனோ எனக்கு ஊர் ஞாபகம்


ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

ஏமாற்றம்

குடும்பத்துடன் செல்ல நினைத்திருந்த சுற்றுலா
நண்பர்களுடன் திட்டமிட்டிருந்த ட்ரெக்கிங் - வீணாக்கியது
பணியிட மாற்றல் உத்தரவு




செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

பட்டுச் செல்லம்





“போயிட்டுறம்ப்பா” என்று
வழக்கம் போல பள்ளிக்கு செல்லும்போது
கையசைத்துச் செல்லும் என் மகள்,
இன்றைய நாளும் இனிய நாள்.






மனைவி

மனைவி நல்ல உடல்நலத்துடன் இருக்கிறாளா என்று நாம் வாங்கும் அடி சொல்லி விடுகிறது.